திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் கோயில். இங்கு வருடம் தோறும் விழாக்கள் எடுக்கப்படுவது வழக்கம் குறிப்பாக வைகுண்ட ஏகாதசி திருவிழா என்பது முக்கிய ஒன்றாக திகழ்கிறது. இந்த நிகழ்வுக்கான திருநெடுந்தாண்டவம் நிகழ்வு தொடக்கம் இன்று மாலை தொடங்க உள்ளது.
அத்தகைய சூழ்நிலையில் முந்தி சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கும் அங்கு பாதுகாப்பிலிருந்த காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதில் சென்னா ராவ் என்ற பக்தருக்கு மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியது. பின்னர் அந்த இடத்திலேயே அவர் அமர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர்கள், அங்கிருக்கக்கூடிய கோயில் நிர்வாகத்தினர் உடனே விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட ஐயப்ப பக்தர்கள் சென்னா ராவ் அவர்கள் சார்ந்த பக்தர்கள் சார்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதே போல் தங்களை தாக்கியதாக கோவில் நிர்வாகத்திலிருக்கக்கூடிய பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் சார்பாக பரத் என்பவர் புகார் கொடுத்தார்.
கொடுக்கப்பட்ட இரு புகார் மீதும் காவல் துறையினர் விசாரணை நடத்தி நடத்தி வந்த நிலையில் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த 34 பக்தர்கள் உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்ததுடன் கோயில் பணியாளரையும் தாக்கியுள்ளனர். திருக்கோயில் பணியாளரை தலைமுடியை பிடித்து உண்டியலில் மோத செய்துள்ளனர். மற்ற பக்தர்களை தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்ததால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
The post ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்..!! appeared first on Dinakaran.