×

ஜோதிட ரகசியங்கள்

ராகுவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க இதுதான் வழி

ஒருவருக்கு ராகு லக்கினத்தில் இருந்தாலும், ஏழாம் இடத்தில் இருந்தாலும் திருமண வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான ஜாதகங்களில் இந்த தோஷம் தாமத திருமணத்தையோ, தம்பதிகளிடம் கருத்து வேற்றுமையையோ பிரிவினையையோ ஏற்படுத்துகிறது. சில ஜாதகங்களின், ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக, திருமண காலங்களில் ஜென்ம ராகு அல்லது சப்தம ராகுதிசை புத்தி நடந்தால், பெரும்பாலும் இந்த விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன. காரணம், ராகுவும் கேதுவும் எதிர் எதிராக இருக்கும்.

உதாரணமாக, ராகு லக்னத்தில் இருந்தால், கேது சப்தம ஸ்தானத்தில் இருக்கும். எனவே, இந்த இரண்டு ஸ்தானங்களும் பாதிக்கும். கேது சின்ன விஷயமாக ஆரம்பிக்கும். ராகு அதைப் பெரிதாக மாற்றி பிரச்னையை உண்டாக்கும். இதற்கு காரணம் இந்த இரண்டு கிரகங்களும் ஒரு பாம்பின் இரண்டு பகுதிகள். ராகு தலை. கேது வால். ஆனால், இந்த ராகு கேதுக்கள் ஒரு ஜாதகத்தில், 3,6,11 – ஆம் இடங்களில் இருந்தால், ராஜயோகத்தைக் கொடுக்கவும் தவறுவதில்லை.

எது எப்படி இருந்தாலும், புற வாழ்க்கை, அதாவது பணம், காசு, ஆடம்பரம் இவற்றில் தூக்கிவிட்டாலும், அகவாழ்க்கையான அன்பு, காதல், குடும்ப, ஒற்றுமை இவைகளில் பிரச்னையைத் தான் ஏற்படுத்துகிறது. எனவே, இந்த திசை புத்திகளில் ஒருவர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சர்ப்ப சாந்தி பரிகாரம் அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

இதற்கான தலங்கள்

காளஹஸ்தி, நாகை, திருக்களர், ராமேஸ்வரம், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், பேரையூர், திருச்செங்கோடு, நாகர்கோயில் நாகநாதர் ஆலயம், திருவேற்காடு, சிதம்பரம் தில்லை காளியம்மன் முதலிய தலங்களுக்குச் சென்று, வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கி ராகுவின் நல்லருளைப் பெறலாம்.

மூன்றாம் பாலினத்தவர்க்கு உதவுக

புதன் அற்புதமான கிரகம். புதன் அறிவுகாரகன். அற்புதம் செய்பவன். கூரிய மதிக்குச் சொந்தக்காரன். எதையும் நுணுகி நுட்பமாகப் பேசும் ஆற்றலைத் தருபவன். எத்தகைய சோதனை வந்தாலும் சாதுரியமாகத் தப்பிக்கும் வழியைக் கற்றுத் தருபவன். கல்விமான். லக்ன கேந்திரத்தில் புதன் இருக்கும்போது, பத்ரயோகம் என்ற மிகப்பெரிய யோகத்தைத் தருபவன். இது பஞ்சமகா புருஷயோகங்களில் ஒன்று. சூரியனுடன் எந்த விதமான பழுதும் இல்லாமல் இணைந்திருக்கும்போது, புதன் ஆதித்த யோகம் என்ற அற்புதமான யோகத்தை வழங்குபவன். ஆனால் இந்த புதன் கெட்டுவிட்டால்,

1. படிப்பு ஏறாது.
2. கல்வித் தடைகள் ஏற்படும்.
3. எந்த காரியத்தையும் முன்பின் யோசனை இல்லாமல் செய்துவிட்டு
அவஸ்தைப்படுவார்கள்.

இதற்கு என்ன பரிகாரம்?

1. எந்தச் செயலைச் செய்தாலும் சற்று நிதானித்துச் செய்ய வேண்டும். அவசரத்தில் நமக்கு விளங்காது என்பதால் நாலு பேரிடம் தீர்க்கமாக யோசித்து நிதானமாகச் செயல்பட வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த காரியத்தையும் செய்யக்கூடாது.

2. ஒவ்வொரு புதன்கிழமையும் இயன் றளவு அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று முடிந்த அளவுக்கு துளசி மாலையோ சரமோ தரவேண்டும்.

3. துளசிச் செடியை வணங்குவதும், பிறருக்கு வழங்குவதும் பராமரிப்பதும் நல்லது.

4. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (திருநங்கைகள்) ஏதேனும் ஒரு வகையில் உதவுவது நல்லது.

எதிலும் வெற்றி கிடைக்க என்ன பரிகாரம்?

ஜோதிடத்தைப் பற்றிய அடிப்படையை நன்கு தெரிந்து கொண்டால் உங்கள் ஜாதகம் எப்படி வேலை செய்கிறது என்பதை நீங்களே எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் அடிப்படையாக பாவகாரகங்கள் என்றும், கிரக காரகங்கள் என்றும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒரு ஜாதகத்தின் பலனைப் பார்க்கின்ற பொழுது இந்த இரண்டு காரகங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டும். ஒரு காரகத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஏமாந்துவிடக்கூடாது.

புரிவதற்காக ஒரு உதாரணம் சொல்லுகின்றேன்.

ஜாதகத்தில் உங்கள் லக்கினத்தில் இருந்து மூன்றாவது கட்டம் அதாவது மூன்றாம் பாவம் வெற்றி, வீரியம், சகோதர உறவுகளைக் குறிக்கிறது. குறிப்பாக, இளைய சகோதரர்களைக் குறிக்கிறது. தம்பிக்கும் வெற்றிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழியை கேள்விப் பட்டிருப்பீர்கள். தைரியஸ்தானம் என்றும் சொல்வார்கள். தைரியம் தானே வெற்றிக்கு அடிப்படை. அதைப் போலவே, கிரகங்களில் செவ்வாய்க் கிரகம் வீரியத்தையும், வெற்றியையும் குறிக்கக்கூடிய கிரகம். உடனே, செவ்வாய் என்றாலே சகோதர உறவுகளை மட்டும்தான் குறிக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒரு பெண்ணுக்கு, அது கணவனையும் குறிக்கக்கூடியது. இப்பொழுது எதிலும் வெற்றி இருக்க வேண்டும் என்று சொன்னால் செவ்வாய் பலமாக நல்ல இடத்தில் இருக்க வேண்டும். மூன்றாம் பாவமும் சனி, ராகு, கேது போன்ற கிரகங்களால் கெடாமல் இருக்க வேண்டும். 6,8,12-ஆம் பாவத் தொடர்பு இல்லாமல் சுபபலம் வேண்டும்.

சரி, இப்படிப்பட்ட அமைப்பு இல்லை என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

இல்லாததை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்கு ஜோதிடம். மிக எளிதான பரிகாரம்தான்.

1. காலை எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் மனம் உருகி ராமாயணத்தில் (தமிழில்கூட படிக்கலாம்) ஒரு அத்தியாயத்தை பாராயணம் செய்யுங்கள்.
2. செவ்வாய்க்கிழமை தவறாமல் அருகாமையில் உள்ள ராமர் சந்நதிக்கோ, அனுமன் சந்நதிக்கோ சென்று வணங்கி வாருங்கள்.
3. காரியம் சித்தியடைய இந்த அனுமன் மந்திரத்தை ஜெபியுங்கள்.

அசாத்ய சாதக ஸ்வாமிந் அசாத்யம் தவகிம்வத
ராம தூத க்ருபாசிந்தோ மத் கார்யம் சாதய ப்ரபோ

முடியாததை சாதிக்கக்கூடியவர், கடினமான காரியங்களைக்கூட செய்யக் கூடியவரான சுவாமி! நீர் ராமனின் தூதர், கருணைக்கடல்; அடியேன் காரியம் வெற்றி பெற அனுக்கிரஹம் செய்வீராக. கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற எனக்கு உதவுங்கள், என்று நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள்.

தந்தை மகன் உறவு

ஒரு ஜாதகத்தில், ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் பாவத்தில் நட்பாய் இருந்தாலும், ஐந்தாம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் நட்புக் கிரகங்களாக இருந்தாலும், தந்தை மகன் உறவு சுமூகமாக இருக்கும். இந்தக் கிரகங்கள் பகை கொண்டிருந்தாலோ, ஒன்றுக்கொன்று ஆறு, எட்டு, பன்னிரண்டு என்கின்ற நிலையில் இருந்தாலோ, தந்தை மகன் உறவு சொல்லும் படியாக இருக்காது.

அப்படி அன்பாய் இருந்தாலும், இருவரும் சேர்ந்து வாழும் நிலை இருக்காது. பையன் பிறந்ததிலிருந்து வெளியூரில் தங்கிப் படிப்பான். வெளிநாட்டில் உத்தியோகம் பார்ப்பான். தந்தையுடன் வந்து ஒரு சில நாட்கள் இருப்பதுகூட அதிசயமாக இருக்கும். இந்த அமைப்பு உள்ளவர்கள், ஒருமுறை சுவாமிமலை சென்று தரிசித்து வரவும்.

தொகுப்பு: பராசரன்

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags : Rahu ,Lagna ,
× RELATED சங்கடம் தரும் சர்ப்ப தோஷம்