×

தீபாவளி சீட்டு பிடித்ததில் ரூ.12.50 லட்சம் நஷ்டம் பெண் தீக்குளித்து தற்ெகாலை முயற்சி: காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம்

துரைப்பாக்கம்: கானத்தூர் அருகே தீபாவளி சீட்டு பிடித்ததில் ரூ.12.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் அடைந்துள்ளார். சென்னை அடுத்த கானத்தூர், கரிக்காட்டு குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (44). காவலாளியான இவரது மனைவி பெயர் சவுந்தர்யா (40). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சவுந்தர்யா தீபாவளிச் சீட்டு பிடித்து வந்துள்ளார். தீபாவளிச் சீட்டு பிடித்ததில் அவருக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே தினந்தோறும் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்றும் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு வெடித்தது. அப்போது ஆத்திரமடைந்த சவுந்தர்யா, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இதைப் பார்த்த வெங்கடேசன் பதறிப்போய் சவுந்தர்யாவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது வெங்கடேசன் மீதும் தீப்பற்றியது. இதனால் வீட்டில் இருந்த குழந்தைகள் பயத்தில் கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு மேல் வீட்டில் வசித்து வரும் வெங்கடேசனின் அண்ணன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தம்பதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சவுந்தர்யா 80% தீக்காயங்களுடனும், வெங்கடேசன் 50 % தீக்காயங்களுடனும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தீபாவளி சீட்டு பிடித்ததில் ரூ.12.50 லட்சம் நஷ்டம் பெண் தீக்குளித்து தற்ெகாலை முயற்சி: காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Durai Pakkam ,Kanathur ,
× RELATED பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம்...