×

தகாத உறவை கைவிடாததால் அதிமுக பிரமுகர் கொலை? காதலியுடன் பேசும் கிளுகிளு ஆடியோவுடன் டிஐஜியிடம் மனைவி புகார்

சேலம்: அதிமுக பிரமுகர் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி டிஐஜியிடம் புகார் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த திருமனூர் சிட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜூ (55). சிட்டாம்பாளையம் ஊராட்சி அதிமுக செயலாளராக இருந்தார். இவரது மனைவி சின்னதங்கம். இவர்களின் மகள் ரசிகா. இவர்களுக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 7ம் தேதி சிட்டாம்பட்டியில் காட்டுப்பகுதியில் ராஜூ சடலமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து ராஜூ உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ராஜூ மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், சின்னதங்கம் மகள் ரசிகாவுடன் நேற்று சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரியை சந்தித்து கணவர் மரணம் தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘தனது கணவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தகாத உறவு இருந்து வந்தது. இதனை அறிந்த அந்த பெண்ணின் கொழுந்தன் எனது கணவரை மிரட்டினார். மேலும் கணவரிடம் இருந்து 85 ஆயிரம் ரூபாய் பறித்துள்ளார்.

தகாத உறவில் இருந்த பெண்ணும், தனது கணவரின் உயிருக்கு கொழுந்தன் மற்றும் கணவரின் உறவினர்களால் ஆபத்து இருப்பதாக செல்போனில் தெரிவித்திருக்கிறார். சொத்தை அபகரிக்க உறவினர்களும் திட்டமிட்டனர். எனது கணவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக சொல்கின்றனர். ஆனால் அப்பகுதியில் மின்சாரம் எதுவும் இல்லை. கணவரின் உடலில் காயங்கள் இருந்தன. அவர் கொல்லப்பட்டிருக்கலாம். அவரது சாவில் மர்மம் இருப்பதால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். மேலும் ராஜூவும் தகாத உறவு பெண்ணும் செல்போனில் கிளுகிளுப்பாக பேசிக்கொண்ட ஆடியோ ஆதாரத்தையும் புகாருடன் இணைத்துள்ளார். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் டிஐஜி உறுதி அளித்துள்ளார்.

The post தகாத உறவை கைவிடாததால் அதிமுக பிரமுகர் கொலை? காதலியுடன் பேசும் கிளுகிளு ஆடியோவுடன் டிஐஜியிடம் மனைவி புகார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,DIG ,Salem ,Vazhappadi ,
× RELATED சேலம் சூரமங்கலத்தில் அதிமுக சார்பில்...