×

குழந்தை உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரம் பிணவறை உதவியாளர் சஸ்பெண்ட்

சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இறந்த குழந்தையை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்ததால் பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடசென்னை பகுதி கன்னிகாபுரத்தில் வசித்து வரும் தம்பதி மசூத் – சோனியா. இவர்களுக்கு கடந்த 5ம் தேதி வீட்டிலேயே குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, தாய்க்கு சிகிச்சை அளிக்க காவல்துறையினர் உதவியுடன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு தாய் மற்றும் இறந்த குழந்தையை கொண்டு வந்துள்ளனர். குழந்தையை பிணவறையில் கொடுத்துவிட்டு சோனியாவுக்கு அளிக்கும் சிகிச்சையை மசூத் கண்காணித்து வந்தார்.

பின்னர் 10ம் தேதி இறந்த குழந்தை அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை செய்யாமல் குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. இந்த தகவல் மற்றும் புகைப்படம் இணைய தளத்தில் வைரல் ஆனது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்தது. இந்நிலையில், இறந்த குழந்தையை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்ததால் பிணவறை உதவியாளர் பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 6ம் தேதி சோனியா என்பவர் வீட்டிலேயே ஒரு பெண் குழந்தையை இறந்த நிலையில் பெற்றெடுத்து தாயும் சேயும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாலை உள்நோயாளியாக சேர்க்கப்பட்டனர். பரிசோதனை செய்து குழந்தை இறந்ததை உறுதி செய்த பின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி போலீஸ் விசாரணைக்கு பின் குழந்தையின் உடலை விதிகளுக்கு முரணாக அட்டைப்பெட்டியில் வைத்து தந்தை மன்சூரிடம் கொடுத்தது உண்மையென்று விசாரணையில் மருத்துவமனை முதல்வருக்கு தெரிந்தது. உடனே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஆணைப்படி சம்பந்தப்பட்ட அரசு பணியாளரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிகழ்வை மருத்துவ கல்வி இயக்ககம் மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்து முதல்வருக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். மேலும், விசாரிக்க மூன்று பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post குழந்தை உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரம் பிணவறை உதவியாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kilpakkam ,
× RELATED போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!