×

சென்னையில் மழை பாதிப்பு காரணமாக மாமா வீட்டிற்கு சென்ற சிறுவன் குளத்தில் விழுந்து பரிதாப பலி

சோழிங்கநல்லூர்: சென்னை பனையூர் ராஜீவ் காந்திநகர், அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (எ) முகமது யாசிக். இவரது மனைவி பானு. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் சென்னையிலிருந்து முகமது யாசிக் மனைவி மற்றும் மகன் முகமது ரிஸ்வான் (7) ஆகியோர் குமரிமாவட்டம் செண்பகராமன்புதூர் அருகே மாதவலாயம், பாறைப்பள்ளி பகுதியில் உள்ள பானுவின் அண்ணன் சாகுல் அமீது வீட்டிற்கு நேற்று காலை வந்தனர். அங்கு, அனைவரும் வீட்டினுள் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த முகமது ரிஸ்வான், திடீரென மாயமானான். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியபோது, அருகே உள்ள குளத்தின் கரையில் முகமது ரிஸ்வான் அணிந்திருந்த துணி நீரில் தெரிந்தது.

அதிர்ச்சியடைந்த அவர்கள் குளத்தில் இறங்கி தேடியபோது, முகமது ரிஸ்வான் நீரில் மூழ்கி கிடந்தான். உடனடியாக அவனை மீட்டு நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் முகமது ரிஸ்வான் இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த வாரம் சென்னையில் பெய்த கனமழையில் முகமதுயாசிக் குடியிருந்த பகுதிக்குள் அளவுக்கதிகமாக வெள்ளம் வந்துள்ளது. இதனால் சகஜ நிலை வரும் வரை அங்கிருந்து மாதவலாயம் பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் இங்கு மகன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

The post சென்னையில் மழை பாதிப்பு காரணமாக மாமா வீட்டிற்கு சென்ற சிறுவன் குளத்தில் விழுந்து பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Choshinganallur ,Thiagarajan (A) Mohammad Yasik ,Amman Koil Street, Panaiyur, Rajiv Gandhinagar, Chennai ,
× RELATED மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய...