திருவனந்தபுரம்: ஆலுவா ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பல ரயில்கள் தாமதமாக சென்றன. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா ரயில் நிலைய அதிகாரிக்கு நேற்று இரவு ஒரு போன் வந்தது. அதில் பேசிய ஒரு நபர், ரயில் நிலையத்தில் குண்டு வைத்திருப்பதாக கூறி உள்ளார். இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி உடனடியாக பாதுகாப்புப் படை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து ஆலுவா ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதைத்தொடர்ந்து ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆலுவா ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.