×

மழைநீர் வரத்து குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு குறைப்பு

குன்றத்தூர்: மழைநீர் வரத்து குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1623 கன அடியாக உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் மழை காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஏரிக்கு நீர்வரத்தை பொறுத்து, உபரிநீர் திறந்துவிடுவது படிப்படியாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் மழை ஓய்ந்ததால் வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து கணிசமாக குறைய தொடங்கியது. இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் 22.64 அடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரம் 24 அடி. மொத்த தண்ணீர் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. தற்போது 3284 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் ஏரிக்கு நீர் வரத்தும் வினாடிக்கு 1091 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் கோடைகால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1623 கன அடி உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்படும் என ஏரியை பாதுகாத்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

The post மழைநீர் வரத்து குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam Lake ,Kunradthur ,Sembarambakkam lake ,Migjam ,Dinakaran ,
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு