×

வேங்கை வயல் வழக்கு டிச.21க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 119 பேரிடம் ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிட்ட நிலையில் 5 சிறுவர்கள் உள்பட 31 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த 31 பேரில் சந்தேகத்துக்குரிய 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. சிபிசிஐடி சார்பில் விசாரணை அதிகாரி மருத்துவ விடுப்பில் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. உண்மை கண்டறியும் சோதனை குறித்து விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் விளக்கமளித்த பிறகே உரிய உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்று கூறி, மனு மீதான விசாரணையை வரும் டிச. 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார்.

The post வேங்கை வயல் வழக்கு டிச.21க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Vengai ,Pudukottai ,Venkai Vyal ,Vengai Vyal ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: தேர்தல்...