×

உத்தரப்பிரதேசம் காவல்நிலையத்தில் நேர்ந்த சம்பவம்: துப்பாக்கியை சரிபார்க்கும்போது தோட்டா பாய்ந்ததில் பெண் காயம்

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள காவல் நிலையத்தில் எதிர்பாராத விதமாக இளம்பெண் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்த இஷ்ரத், சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அலிகாரில் உள்ள காவல் நிலையத்தின் இஷ்ரத்தின் பாஸ்போர்ட்டுக்கு சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதற்காக இஷ்ரத் நேற்று காவல் நிலையம் சென்றிருந்தார். அப்போது காவல் ஆய்வாளர் மனோஜ் சர்மா துப்பாக்கியை பரிசோதித்து கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த தோட்டா இளம்பெண் இஷ்ரத்தின் தலையை தாக்கியது. நிலை குலைந்து கீழே விழுந்த இஷ்ரத்தை போலீசார் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இஷ்ரத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் காவல் ஆய்வாளர் மனோஜ் சர்மாவை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே பாஸ்போர்ட் சரிபார்க்கும் பணிக்கு போலீசார் பணம் கேட்டு இஷ்ரத்திடம் தகராறு செய்ததாக அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர். காவல் நிலையத்தில் இளம்பெண் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் அலிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post உத்தரப்பிரதேசம் காவல்நிலையத்தில் நேர்ந்த சம்பவம்: துப்பாக்கியை சரிபார்க்கும்போது தோட்டா பாய்ந்ததில் பெண் காயம் appeared first on Dinakaran.

Tags : UTTAR ,PRADESH ,STATION ,Lucknow ,Aligarh, Uttar Pradesh ,Uttar Pradesh Police Station ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...