×

போதை ஊசி போட்டுக் கொண்ட இளைஞர் திடீர் உயிரிழப்பு: புளியந்தோப்பில் பரபரப்பு

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பட்டாளம் காஜா சாகிப் தெரு பகுதியை சேர்ந்தவர் டேவிட் (எ) ராஜா (20). மீன் வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் மீது புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட பகுதிகளில் 7 குற்ற வழக்குகள் உள்ளன. புளியந்தோப்பு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பிரிவிலும் உள்ளார்.

இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஷைனி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஜெசு என்ற ஒரு வயது மகன் உள்ளார். போதை பழக்கத்திற்கு அடிமையானவர் டேவிட். அவ்வப்போது போதை ஊசியை தனக்கு தானே போட்டு கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில், தனது வீட்டில் போதை ஊசியை தனக்கு தானே போட்டு கொண்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்ததும் அவரது உறவினர்கள், அவரை எழுப்ப முயற்சித்தனர். அப்போது, அவர் வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அக்கா அம்மு, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் வழியிலேயே டேவிட் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த 6 மாதத்தில் மட்டும் புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ், ஓட்டேரி ஆகிய 3 பகுதிகளிலும் இதுவரை போதை ஊசி பயன்படுத்தி 6 பேர் உயிரிழந்துள்ளனர் தற்போது டேவிட் உயிர் இழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

The post போதை ஊசி போட்டுக் கொண்ட இளைஞர் திடீர் உயிரிழப்பு: புளியந்தோப்பில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Perampur ,David (A) Raja ,Pulianthoppu Battalam Gaja Sakib Street ,Chennai ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு