×

மதுராந்தகம் அருகே பாலாற்றில் மூழ்கி இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்: க.சுந்தர எம்எல்ஏ வழங்கினார்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த பூதூர் கிராமத்தை சேர்ந்தவர் யாகேஷ் (24). பெயின்டரான இவரும், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ஆனந்தன் (20) என்பவரும் வல்லிபுரம் பாலாற்றில் குளித்துள்ளனர். அப்போது ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் இருவரும் அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வெள்ளத்தில் சிக்கிய இருவரையும் காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதில் சிலர் ஆற்றில் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், ஆனந்தனை மட்டும் காயங்களுடன் மீட்டனர். இறந்த நிலையில் சடலமாக யாகேஷ் மீட்கப்பட்டார்.

இறந்தவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்டு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ இறந்தவரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர், ரூ.35 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் நிதியையும் பெற்றுதருவதாக எம்எல்ஏ கூறினார். ஒன்றிய செயலாளர் சத்யசாய், முன்னாள் ஊராட்சி தலைவர் நந்தகோபால், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், திமுக நிர்வாகிகள் சவுந்தர், திருஞான செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

The post மதுராந்தகம் அருகே பாலாற்றில் மூழ்கி இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்: க.சுந்தர எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,K. Sundhara ,MLA ,Yakesh ,Bhudur village ,Madurandakam ,K. Sundara ,Dinakaran ,
× RELATED தெருமுனை பிரசார கூட்டம் மோடியின்...