×

வேளச்சேரியில் 2 பேரை பலிவாங்கிய கோர விபத்து எதிரொலி: கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது..!!

சென்னை: வேளச்சேரியில் 2 பேரை பலிவாங்கிய கோர விபத்து எதிரொலியாக கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை – வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை அருகே அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகில் கட்டுமான பகுதிக்காக சுமார் 50 அடி ஆழ பள்ளம் தோண்டப்பட்டது. பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக இந்த பள்ளத்தில் 8 பேர் சிக்கினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பள்ளத்தில் சிக்கிய 8 பேரில் 6 பேரை பத்திரமாக மீட்டனர்.

இருப்பினும், பள்ளத்தில் சிக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர் நரேஷ் என்பவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். அதேபோல் கட்டுமான பொறியாளர் ஜெயசீலன் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டார். இருவரும் இளைஞர்கள் ஆவர். ஜெயசீலனின் சடலமானது ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. ஜெயசீலனுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்ற தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், 2 பேரை பலிவாங்கிய கோர விபத்து எதிரொலியாக கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுமான மேற்பார்வையாளர்கள் எழில், சந்தோஷ் ஆகியோரை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர். பணியின்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததை அடுத்து வேளச்சேரி போலீஸ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

The post வேளச்சேரியில் 2 பேரை பலிவாங்கிய கோர விபத்து எதிரொலி: கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Velacheri ,Chennai ,
× RELATED தென்சென்னை தொகுதியில்...