சிவகிரி,டிச.8: சிவகிரியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் இன்று நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
சிவகிரியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் இன்று (8ம்தேதி) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்படடிருந்தது. இதையடுத்து சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆனந்த் தலைமையில் புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் முன்னிலையில் சமாதான கூட்டம் நடந்தது.
இதில் சிவகிரி பஸ் நிலையத்திற்குள் வரும் டிச. 11ம் தேதி முதல் அனைத்து பஸ்களும் வந்து செல்லும். சிவகிரி பஜார் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் அகற்றப்படும் என கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் வெங்கட சேகர், நிர்வாக அலுவலர் வெங்கட கோபு, எஸ்ஐ சண்முகவேல், ஆர்ஐ சுந்தரி, போக்குவரத்து கிளை மேலாளர் ஜீவா, விஏஓ புதியராணி, இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன், குருவு, கார்த்திக், கண்ணன், கிருஷ்ணன், முத்தையா, தர்மா, கார்த்திகேயன், மாரியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் இன்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.