×

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேர சிறப்பு மருத்துவ முகாம்: கலெக்டர் ராகுல்நாத் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்குவதற்கு, 24 மணி நேரமும் 234 சிறப்பு மருத்துவ முகாம்கள் இயங்கி வருகின்றன என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தகவல் தெரிவித்தார். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளை தடையின்றி வழங்கும் வகையில் 24 மணி நேர மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை துணை இயக்குநரின் சுகாதாரப் பணிகள் மூலம், பேரிடர் மேலாண்மை அடிப்படையில் தாம்பரம் மாநகராட்சி உள்பட 8 வருவாய் வட்டங்களுக்கு ஆத்தூரில் இருந்து 21 மருத்துவக் குழுக்கள், சேலத்தில் இருந்து 33 மருத்துவக்குழுக்கள் என மொத்தம் 54 மருத்துவக் குழுக்கள் மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றன. மேலும், இம்மாவட்டத்தில் 78 மருத்துவ குழுக்கள் நாளொன்றுக்கு 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 234 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களில் மக்கள் பங்கேற்று, உரிய மருத்துவ சிகிச்சைகள் பெற்று பயனடைய வேண்டும்.

மேலும், அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மூலமாக 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. அங்கு தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளது. மேலும், இயக்குநரகத்திலிருந்து அவசர நிலை கருதி ₹15 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.

மக்களுக்கு ஏதேனும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற நோய் அறிகுறிகள் தென்பட்டால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார மையங்கள் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையங்களையும், சிறப்பு மருத்துவ குழுவினையும் உடனடியாக அணுகலாம். அவசர மருத்துவ உதவி சேவைக்கு 108 எண், கட்டுப்பாட்டு அறை எண் 044-27427412, 27427414 மற்றும் வாட்ஸ்அப் புகார் எண்-9444272345 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேர சிறப்பு மருத்துவ முகாம்: கலெக்டர் ராகுல்நாத் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Corporation ,Collector ,Rahul Nath ,Chengalpattu ,Rahulnath ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...