×

குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது வெள்ளம் அடித்து சென்றதில் வாலிபர் பலி: மற்றொருவர் மீட்பு


குன்றத்துார்: குன்றத்தூர் அருகே ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வெள்ளம் அடித்துச் சென்றதில் ஒருவர் உயிரிழந்தார். குன்றத்தூரை சேர்ந்தவர் பிரசாந்த் (25). இவரது நண்பர் குரோம்பேட்டையை சேர்ந்த அஜ்மல் (26). தற்போது, அஜ்மல் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், மிக்ஜாம் புயல் குறித்து அரசு எச்சரிக்கை விடுத்ததும், அஜ்மல் நேற்று முன்தினம் அவசர அவசரமாக ஐதராபாத்தில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு பேருந்தில் வந்தார். கனமழை காரணமாக அவர் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டார். இதனால் செய்வதறியாது தவித்த அஜ்மல், குன்றத்துாரில் உள்ள தனது நண்பர் பிரசாந்த்தை போனில் தொடர்பு கொண்டு, தன்னை அழைத்துச் சென்று குரோம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் விட்டு விடுமாறு கூறினார்.

அதன்பேரில், அஜ்மலை அழைத்துக் கொண்டு குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு பிரசாந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது, அனகாபுத்தூர் தரைப்பாலத்தில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால், மாற்றுப் பாதை வழியாக செல்ல முடிவு செய்து கரைமா நகரில் இருந்து இரண்டாம் கட்டளை வழியாக, சதானந்தபுரம் தரைப்பாலத்தில் நண்பர்கள் இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்து விடப்பட்டிருந்ததால், அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இரவு நேரம் என்பதால் நண்பர்கள் இருவரும் தட்டுத் தடுமாறி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து நண்பர்கள் இருவரையும் வெள்ளம் இழுத்துச் சென்றது. இதில், பிரசாந்த் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

அஜ்மலும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்த மரக்கிளையை பிடித்தவாறு சத்தம் போட்டார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று, கயிறு கட்டி அஜ்மலை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பிரசாந்தை ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின் இறந்த நிலையில் பிரசாந்த் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இறந்த பிரசாந்த் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது வெள்ளம் அடித்து சென்றதில் வாலிபர் பலி: மற்றொருவர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kunradhur ,Kunradathur ,Kunradurai… ,Kunradurai ,Dinakaran ,
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு