×

150 பவுன், 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் கேட்ட காதலன் வீட்டார் விஷ ஊசி போட்டு பெண் டாக்டர் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரளாவில் காதலன் வீட்டார் கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியாததால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதுகலை மாணவியும், டாக்டருமான இளம்பெண் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹ்னா (28). எம்பிபிஎஸ் முடித்துள்ளார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுகலை படித்து வந்தார். ஷஹ்னா தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுடன் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்.

ஷஹ்னாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஷஹ்னாவுக்கு இரவு பணி இருந்தது. ஆனால் பணிக்கு செல்லாததால் சக டாக்டர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். ஆனால் அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஷஹ்னா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஷஹ்னா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை பரிசோதனை செய்து பார்த்து உள்ளனர். அப்போது ஷஹ்னா நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது செலுத்தும் மயக்க ஊசியை போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஷஹ்னா தன்னுடன் படித்த ஒருவரை காதலித்து வந்து உள்ளார். திருமணத்துக்கு அவரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் வரதட்சணையாக 150 பவுன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் ஆகியவை வேண்டும் என்று காதலனின் வீட்டினர் கட்டாயப்படுத்தி உள்ளனர். இது தான் அவரது தற்கொலைக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் கூறினர்.

கூடை கூடையாக கொடுக்க யாரும் இல்லை
இதற்கிடையே ஷஹ்னா தங்கி இருந்த அறையில் இருந்து போலீசார் கடிதம் ஒன்ைற கண்டெடுத்தனர். அந்த கடிதத்தில், ‘இந்த உலகத்தில் அன்பிற்கு எந்த மரியாதையும் கிடையாது. எனது அப்பா போய்விட்டார். திருமணத்திற்கு வரதட்சணையாக கூடை கூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 150 பவுன், 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் கேட்ட காதலன் வீட்டார் விஷ ஊசி போட்டு பெண் டாக்டர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : BMW ,Thiruvananthapuram ,Kerala ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...