×

மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னையில் பெட்ரோல் பங்க்-குகளில் டீசல் தட்டுப்பாடு.. நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் வாகன ஓட்டிகள்..!!

சென்னை: சென்னையில் புயல் மழைக்கு பிறகு பெட்ரோல் பங்க்-குகள் மீண்டும் செயல்பட தொடங்கிய போதும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. மிக்ஜாம் புயல் கடந்து சென்றாலும், அதன் தாக்கமானது சென்னையில் பல்வேறு இடங்களில் இருக்கிறது. இதிலிருந்து மீண்டும் வருவதற்காக சென்னையில் உள்ள மக்கள் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து 3 நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், அலுவலகங்கள் இன்றிலிருந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கத் துவங்கிவிட்டனர்.

இந்நிலையில், புயல் மழைக்கு பிறகு சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்-குகள் செயல்பட தொடங்கினாலும், பெட்ரோல் தங்குதடையின்றி கிடைக்கிறது. ஆனால், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதன் காரணமாக பலர் பெட்ரோல், டீசலை கேன்களில் வாங்கிச் செல்கின்றனர். மேலும், மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஜெனரேட்டர்கள் இயக்குவதற்காகவும் டீசல் வாங்கிச் செல்கின்றனர். ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக பெருமளவில் டீசல் வாங்கிச் செல்லப்படுவதால் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கிறது.

The post மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னையில் பெட்ரோல் பங்க்-குகளில் டீசல் தட்டுப்பாடு.. நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் வாகன ஓட்டிகள்..!! appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Chennai ,Migjam… ,Migjam ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...