×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 3,937 கன அடியாக குறைப்பு: நீர் வரத்து குறைய தொடங்கியதால் பொதுப்பணித்துறை நடவடிக்கை


பல்லாவரம்: வடகிழக்கு பருவ மழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து, ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வந்ததால், ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அவ்வப்போது படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் பெய்த கனமழையால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால், நேற்று முன்தினம் இரவு ஏரியில் இருந்து 8 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில், மிக்ஜாம் புயல் ஆந்திரா அருகே கரையை கடந்ததால், நேற்று காலை முதல் சென்னை புறநகர் பகுதிகளில் மழை நின்றது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் தற்போது சற்று குறைந்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், தற்போது 22.90 அடியாக தண்ணீர் உள்ளது.

மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில், தற்போது 3,349 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும், ஏரிக்கு வரும் நீர் வரத்தும் 8,514 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், ஏரியில் இருந்து தற்போது 3,937 கன அடி உபரிநீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது. மழை ஓய்ந்துள்ளதால், ஏரிக்கு நீர் வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளதால், உபரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஏரியின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 3,937 கன அடியாக குறைப்பு: நீர் வரத்து குறைய தொடங்கியதால் பொதுப்பணித்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lake ,Pallavaram ,Mikjam ,Chennai ,Chembarambakkam ,Dinakaran ,
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...