×

சென்னைக்கு கொண்டு செல்ல செஞ்சியில் டிராக்டர்களில் நீர் வெளியேற்றும் மின்மோட்டார் பொருத்தும் பணி தீவிரம்

மேல்மலையனூர்:சென்னையில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற செஞ்சியில் டிராக்டர்களில் தண்ணீரை வெளியேற்றும் மின் மோட்டார் கருவிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக சென்னை குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் சூழ்ந்துள்ள மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் வெளியேற்றுவதில் இரவு பகலாக போராடி வருகின்றனர். குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற போதிய அளவு மின்மோட்டார் பயன்படுத்த முடியாத நிலையில் டிராக்டர்களின் மூலம் நீர் இறைக்கும் மோட்டார்கள் தேவை ஏற்பட்டுள்ளது.இதனால் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள இன்ஜினியரிங் கடைகளில் டிராக்டர் மூலம் நீர் வெளியேற்றம் கருவிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை, காஞ்சிபுரம் கள்ளக்குறிஞ்சி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் நீர் இறைக்கும் மோட்டார்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டர்களை தற்போது விவசாயிகள் சென்னைக்கு கொண்டு சென்று நீர் அதிகம் உள்ள பகுதிகளில் மாநகராட்சி ஒப்பந்த பணிக்கும் மற்றும் குடியிருப்புகளிலும், சாலைகளிலும் நீர் நிறைந்துள்ள பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்ற கொண்டு செல்கின்றனர்.

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட மழைநீரை வெளியேற்ற செஞ்சி பகுதியிலிருந்து டிராக்டர்கள் சென்னை மாநகராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மழை நீரை வெளியேற்ற பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.என்எல்சி மோட்டார்கள் நெய்வேலி என்எல்சி நிறுவன சுரங்க பகுதிகளில் கன மழை பெய்யும் பொழுது மழை நீரை என்எல்சி நிறுவனம் ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றுவார்கள்.இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்டுள்ள மழை நீரை அகற்ற என்எல்சி நிறுவனத்தின் சார்பில் நேற்று லாரிகள் மூலம் மழையால் பாதிக்கப்பட்டு இடங்களுக்கு ராட்சத மோட்டர்கள் அனுப்பி வைத்தனர்.

The post சென்னைக்கு கொண்டு செல்ல செஞ்சியில் டிராக்டர்களில் நீர் வெளியேற்றும் மின்மோட்டார் பொருத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Melmalayanur ,Chenji ,
× RELATED மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில்...