×

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்டது புயலிலும் அணையாமல் பிரகாசிக்கும் மகாதீபம்: நாளையுடன் நிறைவு ஆருத்ரா விழாவில் தீப மை வழங்கப்படும்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது கடந்த 26ம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபம் நேற்று 9வது நாளாக காட்சியளித்தது. நாளையுடன் மகாதீபம் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து, 27ம் தேதி ஆருத்ரா விழாவில் தீப மை வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக, கடந்த 26ம் தேதி மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. கார்த்திைக தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, மலை மீது ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது அண்ணாமலையார் திருக்கோயில் ஆன்மிக வழக்கம்.

அதன்படி, தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதற்காக, அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் பருவதராஜகுலத்தினர் தினமும் மலைக்கு சென்று மகா தீபத்தை ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர். அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தினமும் மலை உச்சிக்கு நெய் மற்றும் திரி ஆகியவை அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 9வது நாளாக மகா தீபம் மலையில் காட்சியளித்தது. மிக்ஜாம் புயல், தொடர்மழை மற்றும் பலத்த காற்றிலும் மலைமீது மகாதீபம் தொடர்ந்து காட்சியளிக்கிறது. மேலும், மலையில் மகா தீபம் காட்சியளிக்கும் நாட்களில் கோயிலில் தரிசனம் செய்வதை பக்தர்கள் விரும்புகின்றனர்.

எனவே, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் அலைமோதுகிறது. இந்நிலையில், மலை மீது காட்சிதரும் மகா தீபம் நாளை(6ம் தேதி) இரவுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (7ம் தேதி) காலை தீப கொப்பரையை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும். அதைத்தொடர்ந்து, வரும் 27ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது, மகாதீப மை (தீபசுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, பக்தர்களுக்கு தீப மை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்டது புயலிலும் அணையாமல் பிரகாசிக்கும் மகாதீபம்: நாளையுடன் நிறைவு ஆருத்ரா விழாவில் தீப மை வழங்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Mahadeepam ,Arudra festival ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...