×

மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி


ஆம்பூர்: விவசாய நிலத்தில் கள்ளத்தனமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி விவசாயி உள்பட 2 பேர் இறந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் முதல் தார்வழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(52), விவசாயி. இவர் சாணாங்குப்பம் காப்புகாட்டை ஒட்டி உள்ள ஆம்பூர்தார்வழி பகுதி மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து மாட்டு தீவன பயிர்களை பயிரிட்டிருந்தார். இந்நிலையில் ஆம்பூர் ஓஏஆர் சிக்னல் அருகில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வரும் உறவினரான வெங்கடேசன் (22) என்பவர் நேற்றிரவு ஜெயக்குமார் வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு 11 மணியளவில் வெங்கடேசன், ஜெயக்குமார் இருவரும் விவசாய நிலத்திற்கு காவலுக்கு சென்றனர்.
சுமார் 12 மணியளவில் தீவன பயிர்களை மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாட்டை, வெங்கடேசன் விரட்டி சென்றார்.

அப்போது ராமமூர்த்தி என்பவரது நிலத்தில் கள்ளத்தனமாக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி வெங்கடேசன் தூக்கி வீசப்பட்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட ஜெயகுமாரும் அங்கு விரைந்து சென்றார். அப்போது அவரும் மின்வேலியில் சிக்கிக்கொண்டார். இதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்நிலையில் இன்று காலை நீண்ட ேநரமாகியும் வெங்கடேசன், ஜெயக்குமார் இருவரும் வீடு திரும்பாததால் உறவினர்கள் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது மின்வேலியில் சிக்கி இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மின்வாரியம், வனத்துறை மற்றும் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த மின்ஊழியர்கள் பம்ப்செட்டில் இருந்து மின்வேலிக்கு திருட்டுதனமாக கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர். வெங்கடேசன், ஜெயக்குமாரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நிலத்தின் உரிமையாளரான ராமமூர்த்தியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

The post மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Minveli ,Ampur ,Tirupathur district ,Minwali ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...