×

சென்னையை நெருங்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு விட்டு விட்டு மழை பெய்தது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று பிற்பகல் புயலாக வலுப்பெற உள்ளது. முன்னதாக மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து சென்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் , கடந்த 6 மணி நேரத்தில் வேகம் சற்று அதிகரித்து மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்கிறது.

தற்போது சென்னைக்கு 340 கி.மீ தொலைவில் கிழக்கு – தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் கரையை கடக்கும்போது நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னையை நெருங்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,SOUTHWEST BANK SEA REGION ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...