×

தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்; நடப்போம் நலம் பெறுவோம் திட்ட நடைபயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை, டிச. 3: நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் 8 கி.மீ தூரம் நடைபயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நடைபயிற்சியில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்து உள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களான சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு, இருதய நோய்கள் ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க தமிழக அரசின் மூலம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தொற்றா நோய்களான சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு, இருதய நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் உடல் சார்ந்த பாதிப்புகளை தடுக்கும் விதமாகவும், அதன் மூலம் ஏற்படக்கூடிய இருதய பாதிப்புகள், பக்க விளைவுகளை குறைப்பதற்கும், ”நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சரால் 4.11.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து 8 கி.மீ. தூரம் நடைபயிற்சி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

“நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தை மாவட்ட அளவில் தொடர்ந்து செயல்படுத்தும் விதமாக, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்களுக்கு 8 கி.மீ. தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதை ஊக்குவித்து நடைபயிற்சி ஒருங்கிணைப்பு மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவ முகாம்கள், சுகாதாரத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், நடைபயிற்சி மேற்கொள்வோர் நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இன்று 3ம்தேதி காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து துவங்கப்பட உள்ள 8 கி.மீ தூரம் நடை பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்; நடப்போம் நலம் பெறுவோம் திட்ட நடைபயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Tags : Well ,Pudukottai ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...