×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரமோற்சவம் நடத்த கோரி வழக்கு

 

சிதம்பரம், டிச. 3: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரமோற்சவம் நடத்தக்கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில், கோவிந்தராஜ பெருமாள் சன்னதி உள்ளது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற இந்த கோயிலை நிர்வகிக்க தனி நிர்வாக குழு உள்ளது.

பொது தீட்சிதர்களின் பாரபட்ச போக்கு காரணமாக கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் கடந்த 50 ஆண்டுகளாக பிரமோற்சவம் நடத்தப்படவில்லை எனக் கூறி சிதம்பரத்தைச் சேர்ந்த எம்.என்.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், நடராஜர் கோயிலில் சைவ மற்றும் வைணவ பிரிவுகளுக்கிடையே ஒரு சுமுகமான சூழல் இல்லாததால் பிரமோற்சவ விழா நடத்த முடியவில்லை. அதற்கு காரணம் பொது தீட்சிதர்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகராஜ், கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரமோற்சவம் நடத்தக் கோரி தமிழக அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். இதையடுத்து, இந்த மனுவுக்கு அறநிலையத் துறை, மாவட்ட கலெக்டர் மற்றும் பொது தீட்சிதர்கள் குழு ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரமோற்சவம் நடத்த கோரி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Govindaraja Perumal Temple ,Chidambaram Nataraja Temple ,Chidambaram ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...