×

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,146 ஏரிகளில் 209 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பின

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,146 ஏரிகளில், 200 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து எதிர்பாத்த அளவிற்கு இல்லாததால் மாவட்டத்தில் உள்ள 1,146 ஏரிகளில் 209 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 574 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 572 ஏரிகள் என மொத்தம் 1,146 உள்ளன.

இதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 135 ஏரிகளில் 100 சதவிகிதமும், 96 ஏரிகளில் 75 சதவிகிதமும், 116 ஏரிகளில் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளது. அதேபோல் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 65 ஏரிகள் 100 சதவிகிதமும், 55 ஏரிகள் 75 சதவிகிதமும், 236 ஏரிகள் 50 சதவிகிதம் நிரம்பியுள்ளது. அக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,146 ஏரிகளில் 200 ஏரிகள் 100 சதவிகிதமும், 152 ஏரிகள் 75 சதவிகிதமும், 353 ஏரிகள் 50 சதவிகிதம் நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாகவே பெய்ததால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டாததற்கு முக்கிய காரணம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 9,211 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 85 சதவிகிதம் ஆகும்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,146 ஏரிகளில் 209 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பின appeared first on Dinakaran.

Tags : Tiruvallur district ,Tiruvallur ,-East ,Tamil Nadu… ,
× RELATED சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக...