குத்தாலம்: குத்தாலம் அருகே கோமலில் குண்டும் குழியுமான சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, எனவே சாலையை சிரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் ஏற்கனவே மிகவும் பழுதடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு இந்த சாலையானது தற்பொழுது குளம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. கோமல் கடைவீதியில் இருந்து இந்த சாலையின் வழியாகத்தான் பெரியார்நகர், மேலத்தெரு, கள்ளிக்காடு, கொத்தங்குடி, நக்கம்பாடி, மாந்தை ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கு பிரதான சாலையாகும். இந்த சாலையின் வழியாக ஒரு நாளைக்கு 1000-க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.
எனவே வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜல்லிகற்கள் பெயர்ந்து, பொதுமக்கள் நடக்க முடியாத அளவில் உள்ள சாலையை உடனடியாக புதிதாக அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல கோமல் அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்லும் சாலையும் மழைக்காலங்களில் குளம் போல் காட்சி அளிப்பதாக மாணவ மாணவிகள் கூறுகின்றனர். எனவே சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குத்தாலம் அருகே கோமலில் குண்டும், குழியுமான சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர்: நோய் தொற்று பரவும் அபாயம் appeared first on Dinakaran.