×

கரிசல்மண் பண்பாட்டை வெளிப்படுத்தும் அசத்தலான புகைப்படம் எடுத்தால் பரிசு

 

விருதுநகர், டிச.2:விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் கரிசல் இலக்கிய திருவிழா டிச.8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகையாக பிரித்தனர். தெற்கத்திச்சீமை என அழைக்கப்படும் திருநெல்வேலி, கயத்தார், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், விளாத்திகுளம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக கிடக்கும் கரிசல் நிலத்தை கதைக்களமாகவும், வாழும் மனிதர்களை கதாமாந்தர்களாகவும் கொண்டு வெந்து தணியும் அந்த கந்தக பூமியில் மக்களின் பாடுகளை, வாழ்வியலை, வலிகளை, சந்தோசத்தை அந்த மண்ணிற்கே உரிய வட்டார மொழிநடையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக சொல்லி வரும் இலக்கியமே கரிசல் இலக்கியம்.

கரிசல் இலக்கியத்தையும் கரிசல் பண்பாட்டையும் நமது வருங்கால சந்ததிகளுக்கு அறிந்துகொள்ள கரிசல் இலக்கியங்கள் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும் கரிசல் இலக்கிய படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய படைப்பாளர்களை உருவாக்குவதும் கரிசல் இலக்கிய திருவிழாவின் நோக்கம்.கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகளும், எழுத்தாளர்களும், கல்லூரி மாணவர்களும் கலந்துரையாடும் நிகழ்வுகளும் கரிசல் இலக்கியங்கள் மற்றும் படைப்பாளர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் அடங்கிய கண்காட்சியும் நடைபெற உள்ளது.

கரிசல் மண்ணின் பண்பாட்டை வெளிப்படுத்தும் தொழில் வளம், விவசாயம், உணவு, பழக்கவழக்கங்கள், வழிபாடு, நம்பிக்கைகள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகளை காட்சிப்படுத்தும் விதமான புகைப்படங்களை கலெக்டரின் டிவிட்டர் சமூக வலைத்தளமான @VNRCollector-க்கு Tag செய்யலாம் அல்லது photocontestkarisal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். சிறந்த புகைப்படங்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம், 2வது பரிசு ரூ.15 ஆயிரம், 3ம் பரிசு ரூ.10 ஆயிரம், ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கரிசல் மண்ணின் பண்பாட்டை வெளிப்படுத்தும் புகைப்படங்ளை அனுப்பி வைக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கரிசல்மண் பண்பாட்டை வெளிப்படுத்தும் அசத்தலான புகைப்படம் எடுத்தால் பரிசு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Jayaseelan ,Karisal Literature Festival ,Government ,Medical ,College ,Art ,Gallery ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்