×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வீடியோ விவகாரம் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு: எடப்பாடி பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தான் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியும். மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பின் கீழ் சென்னை உயர் நீதிமன்றம் வருவதால் எதிர்க்கட்சி தலைவருக்கான பாதுகாப்பில் பிரச்னை ஏற்படாது. இதை ஒரு நடைமுறை காரணமாக கூற முடியாது என்று கூறினார்.

அப்போது, சாட்சியம் பதிவு செய்யப்பட்டுவிட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பிபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், இன்னும் சாட்சியம் பதிவு தொடங்கவில்லை என்று விளக்கம் அளித்தார். இதனையடுத்து, மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வீடியோ விவகாரம் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு: எடப்பாடி பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mathew Samuel ,Koda Nadu ,Edappadi High Court ,Chennai ,Delhi ,Kodanad ,
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...