×

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடி உபரிநீர் திறப்பு; பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, டிச.2: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது, என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஏரியிலிருந்து முதல் கட்டமாக 100 கன அடி உபரிநீரும், பின்னர் படிப்படியாக நேற்று முன்தினம் காலை 6000 கன அடி, தொடர்ந்து 4 ஆயிரம் அடியாக குறைத்து திறந்து விடப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை புறநகர் பகுதிகளில் அதிக மழை பெய்யாததால் ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 21.65 அடி தண்ணீர் இருந்தது.

அதேபோன்று, மொத்த தண்ணீர் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3028 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்தும் 1431 கன அடியாக குறைந்தது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நேற்று காலை ஏரியிலிருந்து 402 கன அடி உபரிநீர் மட்டுமே திறந்து பட்டது. இந்நிலையில், வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக நேற்று மாலை 5 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. புயல் கரையை கடந்த பிறகு ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது படிப்படியாக குறைக்கப்பட்டு, குடிநீர் தேவைக்காக ஏரியில் 22 அடி உயரம் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

The post புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடி உபரிநீர் திறப்பு; பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam Lake ,Works ,Chennai, ,Public Works Department ,Dinakaran ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு