×

ஆன்லைன் பிசினஸ் ஆசைகாட்டி தனியார் பெண் ஊழியரிடம் ₹3.91 லட்சம் பணமோசடி

புதுச்சேரி, டிச. 2: ஆன்லைன் பிசினஸ் ஆசைகாட்டி தனியார் பெண் ஊழியரிடம் ரூ.3.91 லட்சம் பணமோசடியில் ஈடுபட்ட மர்மநபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, லாஸ்பேட்டை, மகாவீர் நகரைச் சேர்ந்தவர் அருண்பிரசாத். இவரது மனைவி தேவிகா (29). இவர் நகர பகுதியிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபகாலமாக ஆன்லைன் பிசினசில் சேர, இணையதளத்தில் தகவல்களை தேடியதாக தெரிகிறது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர், ஆன்லைன் மூலமாக தேவிகாவை தொடர்பு கொண்டு குறுந்தகவல் அனுப்பியதாக தெரிகிறது.பின்னர் அந்த நபர் ஆன்லைன் பிசினஸ் தொடர்பான ஆசைவார்த்தைகளை கூறவே முதலில் குறைந்த பணத்தை, மேற்கண்ட நபர் கூறியிருந்த வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு அடுத்தடுத்து கடந்த செப்டம்பரில் கூடுதல் பணத்தை அனுப்பியதாக தெரிகிறது. மொத்தம் ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 200ஐ செலுத்திய நிலையில், அப்பணத்திற்கான குறுகிய கால சலுகைகள் எதுவும் அளிக்கப்படவில்லையாம்.இதையடுத்து மேற்கண்ட நபர் தொடர்பு கொண்டிருந்த அன்லைன் முகவரியில் பணம் வராதது குறித்து விபரம் கேட்க முயன்றபோது அவை திடீரென செயல்படாமல்போனது தெரியவரவே அதிர்ச்சியடைந்தார். தனது பணம் மோசடி போனதை உணர்ந்த அவர், உடனே புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ கீர்த்தி தலைமையிலான போலீசார் மோசடி (420) பிரிவின்கீழ் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஆன்லைன் பிசினஸ் ஆசைகாட்டி தனியார் பெண் ஊழியரிடம் ₹3.91 லட்சம் பணமோசடி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரி டிஜிபியாக ஷாலினி சிங்கை...