சென்னை: நீட் விலக்கு நம் இலக்கு எனும் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கி 41 நாட்களிலேயே 50 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இன்னும் 9 நாள் உள்ள நிலையில் எண்ணிக்கையை அதிகரிக்க திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணியினர் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை திணிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கடந்த அக்டோபர் 21ம் தேதி சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெறும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. டிஜிட்டலாக பெறப்படும் கையெழுத்துகள் வரும் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் மாநாட்டில் முதல்வரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் என்று இலக்கு வைத்து திமுக மாநில நிர்வாகிகள் பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்துகளை பெற்று வந்தனர். ஆனால் கையெழுத்து இயக்கம் தொடங்கி நேற்றுடன் 41 நாட்களே ஆன நிலையில் 50 லட்சத்தை தாண்டியுள்ளது. 50 நாட்கள் முடிய இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் 70 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர். அதன்படி திமுகவினர் ஆர்வமுடன் கையெழுத்துகளை வாங்கி களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post ‘நீட் விலக்கு நம் இலக்கு’ கையெழுத்து இயக்கம் 41 நாளில் 50 லட்சத்தை தாண்டியது appeared first on Dinakaran.