புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 4ம் தேதி தொடங்கும் நிலையில், இன்று அனைத்து கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. 19 நாட்கள் நடைபெறும் கூட்டத் தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெறும். முன்னதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (டிச. 2) காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் 18 மசோதாக்களை கொண்டு வர பாஜ அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தின் விதிகளை ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரிக்கு நீட்டிப்பதற்கான இரண்டு மசோதாக்கள், குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் மசோதா, தபால் அலுவலக மசோதா உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டுள்ளதாக மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
The post டிச.4ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்: 18 மசோதாக்கள் தாக்கல் ஆகிறது appeared first on Dinakaran.