×

சென்னை பார்முலா-4 கார் பந்தயம் தொடர்பான தனியார் நிறுவன ஒப்பந்தங்களை அரசு தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் நிறுவனம் நடத்தும் பார்முலா-4 கார் பந்தயம் தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தீவுத் திடலை சுற்றி டிசம்பர் 9, 10ம் தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக பார்முலா-4 கார் பந்தய போட்டி நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் இருக்கும் நிலையில், சென்னை மாநகரில் எந்த பகுதியிலும் கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என்று தடை விதிக்க கோரி மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் பந்தயம் நடக்க உள்ளது. 250 கிலோ மீட்டர் வேகத்தில் கார்கள் செல்லும்போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும் என்பதால் சிகிச்சை பெறுபவர்களை பாதிக்கும். ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த பந்தயம் உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு தான் பயன்படுத்த முடியுமே தவிர கார் பந்தயத்திற்கு பயன்படுத்த முடியாது என்று மனுக்களில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகாவாச்சாரி, பந்தயத்தை நடத்தும் தனியார் நிறுவனத்திற்காக தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டு, நல்ல சாலைகளை மறு சீரமைப்பதற்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் வீதி கார் பந்தயங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச தரத்திலான பந்தயத்தடம் உள்ள நிலையில் நகரின் மத்தியில் நடத்தப்படுவதை ஏற்க முடியாது. கோடிக்கணக்கில் அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், பந்தயத்திற்கு வரும் வருமானம் அனைத்தும் தனியார் நிறுவனத்திற்கு செல்கிறது. பந்தயத்தை நடத்தும் தனியார் அமைப்பு குறைந்த அளவே முதலீடு செய்துள்ளது. பந்தயத்தில் அசம்பாவிதம் நடந்தால் மருத்துவ செலவுகளை யார் ஏற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது என்று வாதிட்டார்.

அப்போது, மனுதாரர் சார்பில் டெல்லியிலிருந்து வீடியோ கான்பரன்சில் ஆஜரான வழக்கறிஞர், பந்தயம் நடைபெற உள்ள சாலைகளில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், மரங்களும் வெட்டப்பட்டுள்ளன என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் உள்ளதா என்று கேட்டனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஒரு மரம் கூட வெட்டவில்லை, அவ்வாறு வெட்டியதாக புகார் வந்தால் மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்கும். துறைமுகம் மற்றும் கடலோர காவல்படை அலுவலகங்கள் அருகில் இல்லை. ராணுவ அலுவலகங்களுக்கு செல்ல இடையூறு இல்லாத வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. பந்தய தடத்திற்கான சாலை அமைக்கும் பணி நடந்து வருகின்றன. பந்தய வழித்தடத்தின் அருகே குடியிருப்பு இல்லை, பந்தய நாட்களில் பொதுமக்கள் யாரும் அதை பயன்படுத்த போவதில்லை என்றார்.

அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்திற்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது. பந்தயம் நடத்துவதால் அரசு ஈட்டும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா, ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அதற்கு அரசு தரப்பில் ஐபிஎல் போட்டி நடத்தப்படும் நடைமுறையில் தான் இந்த கார் பந்தயமும் நடத்தப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றார். கார் பந்தயத்தை நடத்தும் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், ஏற்கனவே ஐதராபாத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. பந்தய வீரர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் சேர்த்து பொது காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பாண்கள், கட்டமைப்பு, காப்பீடு என 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, அரசுக்கும், பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

The post சென்னை பார்முலா-4 கார் பந்தயம் தொடர்பான தனியார் நிறுவன ஒப்பந்தங்களை அரசு தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai Formula-4 ,Chennai ,Formula 4 ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...