×

குழந்தை திருமணம்: சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்கு… தமிழக அரசு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது தீட்சிதர்களுக்கு எதிராக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சரண்யா என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், குழந்தை திருமணங்களை தடுக்க இந்திய அரசு பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 1929ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில், 1978ம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டு பெண்களுக்கான திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்து. இந்த வயது வரம்பை 21 ஆக உயர்த்தும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அது நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு உள்ள சட்டங்களை தீட்சிதர்கள் பொருட்படுத்தவில்லை. சிதம்பரம் பொது தீட்சிதர்கள், 12 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு திருமணங்கள் செய்து வைக்கின்றனர் என்று மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள், குழந்தை திருமணம் நடத்துவதை தடுக்க இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர், சமூக நலத்துறை செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அடங்கிய நிரந்தர கண்காணிப்பு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அருணராஜன், வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு கோயில் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்கக்கூடிய சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், குழந்தை திருமணம் குறித்து ஏற்கனவே பெறப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டினார். இதையடுத்து இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கில் பொது தீட்சிதர் குழுவையும் எதிர் மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post குழந்தை திருமணம்: சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்கு… தமிழக அரசு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Chidambaram Deekshidars ,Government of Tamil Nadu ,Cuddalore District Police Superintendent ,Chennai ,Chidambaram Dikshidars ,Tamil Nadu Government, ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...