×

பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் சம்பா (சிறப்பு) மற்றும் நவரை, கோடை (ராபி) பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டு திட்டம் யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் மிமி சம்பா பருவத்திலும், நெல் மிமிமி, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்கள் நவரை பருவத்திலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. சம்பா பருவத்தில் காப்பீடு செய்யப்படும் நெற்பயிர் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான 2023 நவம்பர் மாதம் 15ம் தேதிக்குள்ளும், நவரை பருவத்தில் காப்பீடு செய்யப்படும் (நெல் மற்றும் நிலக்கடலை) பயிர்களை 2024 ஜனவரி மாதம் 31 ம் தேதிக்குள்ளும் கரும்பு 2023 பயிரினை 2024 மார்ச் 30ம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீட்டு கட்டணமாக (நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.512.25, நிலக்கடலைக்கு ரூ.458, கரும்பு பயிருக்கு ரூ.2900) செலுத்தினால் போதுமானது.

எனவே, சம்பா மற்றும் நவரை பருவங்களில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்), தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள “விவசாயிகள் கார்னரில்” நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ- அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று கொள்ளலாம்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் விவசாய பரப்பானது 75 சதவீத்திற்கும் மேல் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்தல் மூலம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பின் திட்ட விதிமுறைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டு தொகையில் 25 சதவீதம் இழப்பீட்டுத் தொகையாக பெறலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையோ அல்லது திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ விவசாயிகள் அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Samba ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...