×
Saravana Stores

ஜீவன் உத்சவ் திட்டம் எல்ஐசி அறிமுகம்

மும்பை: ஜீவன் உத்சவ் என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை, எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்ஐசி தலைவர் சித்தார்த் மொகந்தி, எல்ஐசியின் ஜீவன் உத்சவ் என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இது ஒரு தனிநபர், சேமிப்பு, முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இதில் 90 நாட்கள் முதல் 65 வயது வரை உள்ளவர்கள் பலன் பெறலாம். ஆயுள் முழுவதும் உறுதி அளிக்கப்பட்ட வருமானம் மற்றும் ஆயுள் முழுவதும் காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கும். குறைந்த பட்ச பிரீமியம் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள்.

அதிகபட்ச 16 ஆண்டு வரை பிரீமியம் செலுத்தலாம். ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் பிரீமியம் செலுத்தப்பட்ட அடிப்படை காப்பீட்டு தொகையின் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ.40 உறுதியளிப்பு தொகையாக பாலிசி ஆண்டு முடிவில் வரவு வைக்கப்படும். பிரீமியம் செலுத்தும் காலத்துக்குப் பிறகு பாலிசிதாரர் வாழ்வுகாலப் பயனாக கீழ்க்காணும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். முதலாவதாக, ஒவ்வொரு பாலிசி ஆண்டு முடிவிலும் ஒத்திவைப்பு காலமான 3 முதல் 6 ஆண்டுகள் கழித்து ஆயுள் காப்பீட்டு தொகையில் 10 சதவீதம் வழங்கப்படும்.

இரண்டாவதாக, ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் 10 சதவீத ஆயுள் காப்பீட்டு தொகையை உடனடியாக பெறாமல் அதை மொத்தமாக பிறகு எல்ஐசி நிபந்தனைகளின்படி பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 5.5 சதவீதம் ஆண்டு கூட்டு வட்டி கிடைக்கும். மேலும், பாலிசி காலத்தின் காப்பீடுதாரர் இறந்தால் இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட பிரீமியத்தின் 105 சதவீதத்துக்கு குறையாமல் இறப்பு பலன் வழங்கப்படுவது உட்பட பல்வேறு பலன்கள் இதில் உள்ளன. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை www.licindia.in இணையதளம் அல்லது திட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தரகர்கள், காப்பீட்டு வணிக நிறுவனங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஜீவன் உத்சவ் திட்டம் எல்ஐசி அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : LIC ,Mumbai ,Jeevan Utsav ,Dinakaran ,
× RELATED எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்