×

போர் நிறுத்தத்தில் 2வது முறையாக 10 இஸ்ரேலியர்கள், 4 தாய்லாந்து பணய கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ்: போர் நிறுத்தம் மேலும் நீடிப்பா?

டெல் அவிவ்: 2வது முறையாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாட்களில் 10 இஸ்ரேலியர்கள், 4 தாய்லாந்து பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே, 4 நாள் போர் நிறுத்தம் கடந்த 24ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த 4 நாள் போர் நிறுத்தம் கடந்த 27ம் தேதி முடிவுக்கு வந்தது. அதே சமயம் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க சர்வதேச மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பலனாக போர் நிறுத்தத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க இஸ்ரேல்-ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன.

அதன்படி நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தம் நேற்று முன்தினம் காலை அமலுக்கு வந்தது. 9 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி என 10 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். தவிர மற்றொரு உடன்படிக்கையின்படி தாய்லாந்து நாட்டை சேர்ந்த 2 பேரும் காசாவில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினருடன் இணைந்தனர். இதனிடையே 10 பணய கைதிகளுக்கு ஈடாக 30 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.இந்நிலையில் நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான நேற்றும் பணய கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதில் இருதரப்பும் மும்முரம் காட்டின.

விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பும் பரிமாறி கொண்டன. அந்த வகையில் நேற்றிரவு கடைசி கட்டமாக 10 இஸ்ரேலியர்கள், 4 தாய்லாந்து நாட்டினரை ஹமாஸ் விடுவித்துள்ளது. காசா முனையில் இருந்து எகிப்து ராபா எல்லையில் அவர்கள் விடப்பட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்க்கப்படுவார்கள் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடைசி கட்டமாக பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். இன்று காலை 10.30 மணியுடன் 6 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. அதன்பின் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.

இருந்தபோதிலும் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொள்ளும். 10 மாத குழந்தை மற்றும் அந்த குழந்தையின் குடும்பத்தினரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

அவர்கள் காசா மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் இஸ்ரேல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அதே நேரத்தில் போர் நிறுத்தத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாசுடன் பேச்சுவார்த்தை நடத்தின.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், மனிதாபிமான அடிப்படையில் மேலும் 2 நாட்களுக்கு போரை நிறுத்தி வைக்க இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இருப்பினும் நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தம் இன்று காலை முதல் அமலுக்கு வரும் என பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தர்களாக செயல்படும் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் பட்சத்தில் மேலும் பல பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post போர் நிறுத்தத்தில் 2வது முறையாக 10 இஸ்ரேலியர்கள், 4 தாய்லாந்து பணய கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ்: போர் நிறுத்தம் மேலும் நீடிப்பா? appeared first on Dinakaran.

Tags : Hamas ,Israelis ,Tel Aviv ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்