×

ஐயங்குளத்தில் அலங்கார ரூபத்தில் சுப்பிரமணியர் பவனி ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் தீபத்திருவிழா தெப்பல் உற்சவம் நிறைவு

திருவண்ணாமலை, நவ.30: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா தெப்பல் உற்சவத்தின் நிறைவாக, ஐயங்குளத்தில் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நேற்று இரவு நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தொடர்ந்து 10 நாட்கள் நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான மகாதீப பெருவிழா கடந்த 26ம் தேதி வெகு விமரிசையாக நடந்தது. அன்று மாலை, அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்திர தீர்த்தம் எனப்படும் ஐயங்குளத்தில் கடந்த 3 நாட்களாக தெப்பல் உற்சவம் நடந்தது. அதன்படி, முதல் நாளன்று சந்திரசேகரரும், இரண்டாம் நாளன்று பராசக்தி அம்மனும் தெப்பலில் பவனி வந்து அருள்பாலித்தனர். அதன் தொடர்ச்சியாக, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நேற்று இரவு நடந்தது.

அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் இருந்து அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியர், சன்னதி தெரு, ஐயங்குளத்தெரு வழியாக ஐயங்குளத்தை அடைந்தார். அப்போது, சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், ஐயங்குளத்தில் 3 முறை பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குளத்துக்குள் இறங்க பக்தர்களை அனுமதிக்காமல் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மேற்கொண்ட முயற்சியால், தூய்மை அருணை அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு ஐயங்குளம் ₹3 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. அதனால், புதுப்பொலிவு பெற்ற ஐயங்குளத்தில் கடந்த 3 நாட்களாக தெப்பல் உற்சவம் இதுவரை எப்போதும் இல்லாத அளவில் சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பல் உற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்நிலையில், தீபத்திருவிழாவின் நிறைவாக சண்டிகேஸ்வரர் உற்சவம் இன்று நடக்கிறது. பஞ்சமூர்த்திகளில் ஒருவராக தீபத்திருவிழாவில் பவனி வந்து அருள்பாலித்த சண்டிகேஸ்வரர், வெள்ளி ரிஷப வாகனத்தில் மாடவீதியில் இன்று இரவு பவனி வருகிறார். மேலும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும் உடன் பவனி வருகிறார். இந்த நிகழ்வுடன் இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா முழுமையாக நிறைவு பெறும்.

The post ஐயங்குளத்தில் அலங்கார ரூபத்தில் சுப்பிரமணியர் பவனி ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் தீபத்திருவிழா தெப்பல் உற்சவம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Subramanian ,Bhavani ,Aiyangulam ,Deepatri festival Thepal Utsavam ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Kartikai Deepatri Thepal Utsavam ,Subramanian Thepala Utsavam ,Iyangulam ,Subramaniar ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...