×

நடுவானில் விமானத்தில் சண்டையிட்ட தம்பதியால் பரபரப்பு: விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டு சண்டையிட்டவர் போலீசில் ஒப்படைப்பு

டெல்லி: பாங்காக் நோக்கிச் சென்ற விமானத்தில் கணவன் – மனைவிக்குள் சண்டை ஏற்பட்டதால், அந்த விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. பவேரியா நாட்டின் மியூனிச்சில் இருந்து பாங்காக் நோக்கிச் சென்ற லுஃப்தான்சா விமானத்தில் பயணித்த பயணிகளில் கணவன் – மனைவி ஜோடிக்குள் தகராறு ஏற்பட்டது. இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால், விமான நிலைய பணியாளர்கள் இருவரும் சமாதனப்படுத்த முயன்றனர். ஆனால் இருவரும் தங்களது சண்டையை கைவிடவில்லை. அதனால் விமானத்திற்குள் அசாதாரண சூழல் ஏற்பட்டது. நிலைமை கட்டுக்குள் இல்லாததால், விமானத்தை பாகிஸ்தானில் தரையிறக்க விமானி முடிவு செய்தார்.

அதற்காக பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அலுவலகத்தை அவர் தொடர்பு கொண்டார். அவர்களிடம் இருந்து ஒப்புதல் உத்தரவு வராததால், டெல்லி விமான கட்டுப்பாட்டு அலுவலகத்தை லுஃப்தான்சா விமானி தொடர்பு கொண்டார். டெல்லி விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கினர். அடுத்த சில நிமிடங்களில் லுஃப்தான்சா விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் தகராறு செய்து கொண்ட ஜோடியில், கணவரை மட்டும் விமான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். அவர் டெல்லி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நடுவானில் விமானத்தில் சண்டையிட்ட தம்பதியால் பரபரப்பு: விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டு சண்டையிட்டவர் போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Bangkok ,Bavaria ,Dinakaran ,
× RELATED தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் ராஜினாமா