×

வேலூர் பொய்கை சந்தைக்கு தொடர் மழையால் கால்நடைகள் வரத்து குறைவால் வர்த்தகம் பாதிப்பு

*சேறும் சகதியுமானதால் வியாபாரிகள் அவதி

வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தைக்கு தொடர் மழையால் கால்நடைகள் வரத்து குறைந்ததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தீவனங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது. இதனால் கால்நடைகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக விட்டுவிட்டு பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று சந்தைக்கு கால்நடைகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. 800க்கும் குறைவான மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள், விற்பனைக்கு வந்தது. இதனால் நேற்று ₹80 லட்சத்திற்கு குறைவாக வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தொடர் மழையின் காரணமாக மாட்டு சந்தை முழுவதும் சேறும் சகதியாக காணப்பட்டது. மழைநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கியது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரமாக மழைவிட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் வெளியூரில் இருந்து வர வேண்டிய மாடுகள் வரவில்லை. உள்ளூரில் இருந்து குறைவான மாடுகள் வந்தது. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. பசு மாடுகளை அதிகளவில் வாங்க முன்வருகிறார்கள். இதனால் விலையும் சற்று அதிகமாக உள்ளது’ என்றனர்.

The post வேலூர் பொய்கை சந்தைக்கு தொடர் மழையால் கால்நடைகள் வரத்து குறைவால் வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Poikai ,Poikai Cattle Market ,
× RELATED வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்