×

சுரங்கப்பாதைக்குள் சிக்கிய முதல் 24 மணி நேரம் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது: மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வெளியிட்ட உருக்கமான தகவல்

டேராடூன்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிய முதல் 24 மணி நேரம் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்ததாக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வெளியிட்ட உருக்கமான தகவல் தெரிவித்துள்ளனர். உத்தராகண்டில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதலுதவி அளிக்கப்பட்டதில் அனைத்து தொழிலாளர்களும் நலமுடன் இருப்பது தெரியவந்தது. உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

இந்நிலையில், சுரங்கப்பாதைக்குள் 17 நாட்கள் சிக்கியிருந்தபோது நடந்தது என்ன என்பது பற்றி மீட்கப்பட்ட தொழிலாளி சுபோத்குமார் வர்மா பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், சுரங்கப்பாதைக்குள் சிக்கிய முதல் 24 மணி நேரம் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னுடன் இருந்த 2, 3 பேருக்கு உடல் நலக்குறைவு இருந்தது. சுரங்கத்துக்குள் சிக்கிய 24 மணி நேரத்துக்கு பிறகு எங்களுக்கு உணவு வழங்குவது தொடங்கியது. மறுநாள் முதல் எங்களுக்கு பருப்பு, சாதம், சப்பாத்தி உள்ளிட்டவை குழாய் மூலம் வழங்கப்பட்டது.

அரசின் முயற்சி, மீட்புக்குழுவின் சிறப்பான செயல்பாட்டால் நாங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தார். சுரங்கத்துக்குள் சிக்கிய முதல் நாள் மட்டும் மிகவும் அச்சமாக இருந்ததாக மற்றொரு தொழிலாளி பாஸ்கர் குல்பே தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 2-வது நாள் முதல் உணவு, தண்ணீர் கிடைத்ததால் அச்சத்தில் இருந்து விடுபட்டு இயல்புக்கு திரும்பினோம். முதல் சில நாட்கள் திரவ உணவு மட்டுமே வழங்கப்பட்டது, பின்னர் திட உணவுகள் கிடைத்தன. குடும்பத்தினருடன் பேசுவதற்காக மைக் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

சுரங்கத்துக்கு வெளியே காத்திருந்த எனது சகோதரருடன் மைக்கில் பேசினேன். தீபாவளி நாளில் சிக்கிக் கொண்டோம்; தற்போது வெளியே வந்துவிட்டோம்; எங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் நாள்தான் எங்களுக்கு தீபாவளி. எங்களது குடும்பத்தினரை வீடியோ காலில் பேசினோம். அவர்களை சந்திக்க ஆவலாக உள்ளோம் என்று குறிப்பிட்டார். இதனிடையே, சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

The post சுரங்கப்பாதைக்குள் சிக்கிய முதல் 24 மணி நேரம் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது: மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வெளியிட்ட உருக்கமான தகவல் appeared first on Dinakaran.

Tags : Dehradun ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...