×

அரசு குவாரிகளில் மணல் கொள்ளையும், முறைகேடுகளும் நடக்கவில்லை உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்பிப்போம்: திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ பேட்டி

சென்னை: அரசு குவாரிகளில் எந்தவிதமான மணல் கொள்ளையும், முறைகேடுகளும் நடக்கவில்லை என்பதை உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என்று திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:
அமலாக்கத் துறை சட்டவிரோத பணபரிமாற்றச் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றால், அதற்கு அடிப்படையான ஒரு வழக்கு உரிய காவல்துறையால் பதியப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். அமலாக்கத்துறை 4 முதல் தகவல் அறிக்கையை வைத்துக்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க போவதாக சொல்லியுள்ளார்கள். அந்த 4 வழக்குகளும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மணல் குவாரிகளுக்குச் சம்பந்தம் இல்லாதவை. தனியார் மணல் கொள்ளைகாரர்களால் நடத்தப்பட்ட குவாரிகளில் போலியாக ஆதாரங்களை வைத்துக்கொண்டு அமலாக்கத் துறை இந்த வழக்கைப் பதிவுசெய்து தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை தன்னுடைய பதிலில், ‘நாங்கள் எவ்வளவு மணல் கொள்ளை நடந்துள்ளது என்பதை சேகரித்துள்ளோம்’ என பொய்யான தகவலை உயர்நீதிமன்றத்தில் கொடுத்துள்ளது. ஆனால் மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்பதை உயர்நீதிமன்றம் சொல்லியுள்ளது. தங்களுக்கு அதிகாரம் இல்லாத, மணல் கொள்ளை நடந்ததா இல்லையா என்ற விசாரனையை அமலாக்கத் துறைச் சட்டத்திற்குப் புறம்பாக நடத்த கூடாது என்றுதான் வாதம் செய்தோம். அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி அமலாக்கத்துறை இந்த விசாரணையைச் செய்ய முடியாது. அரசு அதிகாரிகளை அழைக்கும்போது பிரிவு 50 (2)-இன் கீழ் சம்மன் கொடுக்க அதிகாரம் கிடையாது. அது முறையற்ற புலன் விசாரனை. சட்டவிரோத பணபரிமாற்ற சட்ட அடிப்படையில் அமலாக்கத் துறையினர் மாநில அரசின் அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்றால் பிரிவு 54-ன்கீழ் மட்டும்தான் சம்மன் கொடுத்து விசாரிக்க வேண்டும்.

2016 தேர்தலில் பா.ஜ. தனித்து போட்டியிட்டது. தேர்தல் பரப்புரையில் அமித்ஷா, அ.தி.மு.க. ஆட்சியில் ஏறக்குறைய 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார். ஆனால் பா.ஜ.வினர், அ.தி.மு.க. மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மணல் கொள்ளை குறித்த வழக்குகள் நடைபெற்று கொண்டுள்ளன. பா.ஜ. ஆட்சி செய்யும் மாநிலங்களில் எவ்வளவு மணல் கொள்ளை வழக்குகள் உள்ளன என்ற பட்டியலையும் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம். அங்கு அமலாக்கதுறையினர் எந்தப் புலன் விசாரனைகளையும் மேற்கொள்ளவில்லை.

2024 தேர்தலை எதிர்நோக்கி உள்ள நேரத்தில், தி.மு.க. அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் ₹4730 கோடி அரசிற்கு வந்திருக்க வேண்டியது வரவில்லை என பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 2011-12ல் 31 லட்சம் லோடுகள் மணல் விற்பனை அரசால் நடந்துள்ளது. 2021ல் 1.5 லட்சம் லோடுகள் மட்டும் தான் விற்பனை செய்ய முடிந்தது. ஆற்று மணலுக்கு பதிலாக இ-சான்ட் மணல் விற்பனைக்கு வந்ததால் மக்களிடம் ஆற்று மணல் வாங்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. 2021-22ல் 80 ஆயிரம் லோடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை ஆய்வுகூட இல்லாமல் 27.75 லட்சம் லோடுகள் விற்கப்பட்டிருக்க வேண்டும் என்ற தவறான கணக்கை பதில் மனுவில் தாக்கல் செய்துள்ளனர். விளக்கம் கேட்ட நோட்டீசில், தமிழ்நாடு அரசு மணல் கொள்ளையைத் தடுக்க சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டும்தான் காரணம் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

பா.ஜ.வின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதாலும், மக்கள் அவர்கள் மீது கோபமாக இருப்பதாலும் மிகப்பெரிய பின்னடைவு வரக்கூடிய தேர்தலில் அவர்களுக்கு ஏற்படும். பா.ஜ.வினர் யாரையாவது திட்டுகிறார்கள் என்றால், அவர்கள் நல்லவர்கள் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள். பொய்யர்கள் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அ.தி.மு.க. – பா.ஜ. கூட்டணி விரிசல் என்பதும் போலியான நாடகம் என்பதை பலமுறை திமுகவின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

எதிர்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மீது மட்டும்தான் பா.ஜ.வினர் வழக்குப் போட்டுள்ளனர். அரசு அதிகாரிகளை மிரட்டி ஒரு வாக்குமூலம் வாங்கினால் அதை வைத்து வழக்கு போட முடியாதா என்றும் அமலாக்கதுறையினர் பார்க்கின்றனர். முத்தையா என்ற அதிகாரி கூறும் போது கூட, தன்னை துன்புறுத்தி அமலாக்கதுறையினர் வாக்குமூலம் வாங்கியதாக பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளதோடு காவல்துறையில் புகாரே கொடுத்துள்ளார்.

இந்த வழக்கை முழு விசாரணைக்கு வரும் 21ம் தேதி எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் கூறியுள்ளது. அப்போது அரசு குவாரிகளில் எந்தவிதமான மணல் கொள்ளையும், முறைகேடுகளும் நடக்கவில்லை என்பதை உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்பிப்போம். சட்டவிரோத பணபரிமாற்ற சட்ட அடிப்படையில் சிறையில் இருக்கும் ஒருவர், ஜாமீன் வேண்டும் என்றால், எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்திற்கு நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களைச் சமர்பிக்க வேண்டும். அதேநேரம் அவரின் உடல்நிலை பாதிப்படைந்திருந்தால் இந்த விதி தளர்த்தப்படும்.

அதனால்தான் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் கேட்டோம். அது நீதிமன்றத்திற்குத் திருப்தியாக இல்லை என்பதால், கீழ் நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட சொல்லியுள்ளார்கள். ஜாமீன் வழங்குவதற்கு முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் கருதியிருந்தால் டிஸ்மிஸ் செய்திருக்கலாம், ஆனால் அப்படிச் செய்யாமல், ஜாமீன் வழங்க முகாந்திரம் இருப்பதால், கீழ் நீதிமன்றம் சென்று மெரிட்ஸ் படி கேட்க அறிவுறுத்தியுள்ளார்கள். செந்தில்பாலாஜி தொடர்புடைய வழக்கும் பொய்யான ஆதாரங்களின் அடிப்படையில்தான் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது. அதை மெரிட்ஸ்படி ஜாமீன் கேட்கும் போது தாக்கல் செய்வோம். இவ்வாறு என்.ஆர்.இளங்கோ கூறினார்.

The post அரசு குவாரிகளில் மணல் கொள்ளையும், முறைகேடுகளும் நடக்கவில்லை உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்பிப்போம்: திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,NR Ilango ,Chennai ,MP NR Ilango ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி