×

சேரி மொழி பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காததால் குஷ்பு வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது: உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு

சென்னை: சேரி மொழி பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காத குஷ்பு வீட்டை முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. அந்த வகையில் குஷ்பு கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில்,‘‘ சேரி மொழி பேசத் தெரியாது’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்தன.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்ததோடு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்தனர். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனால் பாஜ நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவின் வீட்டை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸ் எஸ்சி பிரிவு அறிவித்தது. இதையடுத்து சென்னை பட்டினப்பாக்கத்தில், குஷ்பு வீட்டுக்கு செல்லும் சாந்தோம் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்திரப்பதிவுத் துறை அலுவலகம் அருகே உள்ள சாலையில், காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையில் காங்கிரசார் திரண்டனர். குஷ்புவின் உருவ பொம்மையை எரித்தனர். இதையடுத்து, அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இது குறித்து எம்பி.ரஞ்சன் குமார் கூறுகையில், ‘‘இது எங்களின் முதற்கட்ட போராட்டம்தான். மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம். நாளை(இன்று) அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.சி. துறை மாவட்ட தலைவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுப்பார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் செய்வோம். நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் கோரி நடிகர் சங்க தலைவரிடம் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ேளாம்” என்றார். போராட்டத்தில், மாநில செயலாளர் டி.விஜயசேகர், ரவிந்திரதாஸ், நிலவன், டாக்டர் உமாபாலன், ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, கவுன்சிலர் அமிர்தவர்ஷினி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சேரி மொழி பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காததால் குஷ்பு வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது: உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kushpu ,Sari ,Chennai ,Sensation ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில்...