×

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம், நாலூர் ஊராட்சியில் உள்ள கம்மவார்பாளையம் கிராமத்தில் இரண்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால், கம்மவார்பாளையம் செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என கடந்த 12 வருடங்களாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராடி வருகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

நாலூர் ஊராட்சியில் இரண்டு முறை அதிமுகவை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், இதுவரை ஊராட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனவும், சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் வர முடியவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் காலை முதல் 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இதனால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் பொன்னேரி தாசில்தார் மதிவாணன், மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், இன்னும் ஒரு வார காலத்திற்குள் சாலை சீர் செய்யப்படும் என உத்தரவாதம் அளித்தனர். உயர் அதிகாரிகளிடம் இது குறித்து பேசி மிக விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Kammavarpalayam ,Nalur Panchayat ,Meenjoor Union ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...