×

வளசரவாக்கம் பகுதியில் செயல்படும் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் அடித்துக்கொலை: சிசிடிவி பதிவை அழித்தது அம்பலம்

பூந்தமல்லி: வளசரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விஜய் (27). மது போதைக்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்து விட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால் அவரது சகோதரர் ராஜேஷ், வளசரவாக்கம் ஓம் சக்தி நகரில் உள்ள கிரீன் லைப் பவுண்டேஷன் என்ற போதை மறுவாழ்வு மையத்தில், கடந்த செப். 12ம் தேதி விஜய்யை சேர்த்துள்ளார்.

இந்நிலையில், விஜய்யை சந்திக்க ராஜேஷ் சென்றபோது, மறுவாழ்வு மைய நிர்வாகிகள், அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில், கடந்த தினங்களுக்கு முன் விஜய்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி, அங்கிருந்த ஊழியர்கள், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, ஏற்கனவே விஜய் இறந்தது தெரியவந்தது. மறுவாழ்வு மைய நிர்வாகிகள் இதுபற்றி ராஜேஷ்க்கு தெரியப்படுத்தினர்.

இதை கேட்டு அவர் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே ராஜேஷ், மறுவாழ்வு மையத்துக்கு வந்து விசாரித்தார். ஆனால் அவரை அங்கிருந்தவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு சென்று பார்த்தபோது, விஜய்யின் கை மற்றும் கால்களில் காயம் மற்றும் ரத்தக்கட்டு இருந்தது. இதை பார்த்து ராஜேஷ் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, விஜய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், மறுவாழ்வு மையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். அதில், பதிவுகள் அழிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத் குமார், கணக்காளர் குரூஸ், நோயாளிகளை பராமரிக்கும் ராஜ்கிரண் என 3 பேரை, வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், விஜய்க்கு கடந்த 24ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக சிகிச்சை வழங்கப்படவில்லை. இதையடுத்து ஒரு டாக்டரை வரவழைத்து பரிசோதித்து பார்த்தபோது, எந்த பிரச்னையும் இல்லை, நன்றாக இருக்கிறார், என டாக்டர் கூறிவிட்டு சென்றார். ஆனால் 25ம் தேதி விஜய்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், அலறி கூச்சலிட்டுள்ளார். அப்போது மையத்தின் கணக்காளர் குரூஸ், விஜய்யை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான மூச்சு திணறல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது உரிய சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியதோடு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் விஜய் இறந்ததும், போலீசிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க சிசிடிவி பதிவுகளை அழித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போதை மறுவாழ்வு மைய கணக்காளர் குரூஸ், உரிமையாளர் வினோத் குமார், அவரது நண்பர் அஜய் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனை சென்று பார்த்தபோது, விஜய்யின் கை மற்றும் கால்களில் காயம் மற்றும் ரத்தக்கட்டு இருந்தது. இதையடுத்து, விஜய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

The post வளசரவாக்கம் பகுதியில் செயல்படும் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் அடித்துக்கொலை: சிசிடிவி பதிவை அழித்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Valasaravakkam ,Poontamalli ,Valasarawak ,Ambalam ,Dinakaran ,
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...