சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய 15.34 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 27ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 27ம் தேதி முதல் வருகிற டிசம்பர் 9ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோர் வசதிக்காக நவம்பர் 4, 5ம் தேதி மற்றும் நவம்பர் 25ம் தேதி, 26ம் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.
அதன்படி, தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர மற்ற 37 மாவட்டங்களில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. முகாமில், 18 வயது முடிந்தவர்கள் மற்றும் 18 வயது முடிந்தும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க ஆர்வம் காட்டினர். அதேபோன்று, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தால் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் எண்ணை இணைக்கவும் முகாமில் வசதி செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்வதற்கு கடந்த சனி, ஞாயிறு நடைபெற்ற சிறப்பு முகாமில் சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட கடந்த மாதம் 27ம் தேதி முதல் நேற்று முன்தினம் (26ம் தேதி) வரை கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சத்து 13 ஆயிரத்து 535 பேரும், நீக்கம் செய்ய 1,21,046 பேரும், இடமாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய 4,99,302, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 72 பேர் என மொத்தம் 15,33,955 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். புதிதாக பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாக வந்து ஆய்வு செய்வார்கள். அவர்கள் அளித்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். டிசம்பர் 9ம் தேதி வரை புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க 9.13 லட்சம் பேர் விண்ணப்பம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் appeared first on Dinakaran.