×

திருக்கழுக்குன்றத்தில் கிரிவலம் வந்த மூதாட்டி மயங்கி விழுந்து பலி: மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என குற்றச்சாட்டு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் கிரிவலத்தின்போது மூதாட்டி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலாவதி (60). ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட இவர் நேற்று முன்தினம் கார்த்திகை தீபம் என்பதால் திருக்கழுக்குன்றத்திற்கு உறவினர்களுடன் வந்து கார்த்திகை தீப பெரிய விளக்கேற்றும் நிகழ்ச்சியில் இரவு கிரிவலம் வந்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த உறவினர்கள் மற்றும் பக்தர்கள் அவரை உடனே திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால், கலாவதி நீண்ட நேரமாக உயிருக்கு போராடினார். நீண்ட நேரத்திற்கு பிறகு வந்த ஒரு மருத்துவர் கலாவதியை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக கூறினார். தகவலறிந்து அங்கு வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் கலாவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் மற்றும் செவிலியர் யாரும் இல்லாததால் தான் கலாவதி உயிரிழந்தார். மருத்துவர்கள் இருந்து சிகிச்சையளித்திருந்தால் கலாவதியை காப்பாற்றியிருக்க முடியும். எனவே, இந்த உயிர் பலிக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என்று குற்றம் சாட்டி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருக்கழுக்குன்றத்தில் கிரிவலம் வந்த மூதாட்டி மயங்கி விழுந்து பலி: மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Krivalam ,Thirukkalukkunram ,Thirukkalukunram ,
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்