×

திருடுபோனது… திரும்பி வந்தது… அண்டா ஆபரேஷன்-2ல் மீத நகைகள், பணம் மீட்பு: மீண்டும் ‘இன்ப அதிர்ச்சி’

திருமங்கலம்: திருமங்கலம் அருகே திருடு போனதில் ஒப்படைக்கப்பட்டது போக மீதமுள்ள நகைகளும் 2ம் நாள் வைத்த அண்டா மூலம் மீட்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரியபொக்கம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராகவன்(56). இவரது வீட்டில் கடந்த 24ம் தேதி பட்டப்பகலில் 26 பவுன் நகைகள், பணம் ரூ.21,500 திருடு போனது. இதுகுறித்து சிந்துபட்டி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில், உள்ளூர் மக்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கிராம பெரியவர்கள், போலீசாரிடம் தங்களது ஊர் நடைமுறையை பின்பற்றி திருடு போன நகைகள், பணத்தை மீட்டுக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, கிராமத்திலுள்ள பள்ளியில் 24ம் தேதி இரவு பெரிய அண்டா வைத்து வீடு வீடாக கவர் கொடுத்து 23 பவுன் நகை மீட்கப்பட்டது. மீதமுள்ள 3 பவுன் நகைகள், பணத்தை மீட்க நேற்று முன்தினம் வீடு வீடாக கவர் கொடுக்கப்பட்டு பள்ளியில் அண்டா வைக்கப்பட்டது. ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டு அண்டாவிலுள்ள கவர்களை பிரித்து பார்த்தபோது 3 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.20 ஆயிரம் கிடைத்தது. இதனை கிராம பெரியவர்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருடினாலும் ஊர் பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொண்டு, நகைகள், பணத்தை ஒப்படைத்த செயலுக்கு, சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

The post திருடுபோனது… திரும்பி வந்தது… அண்டா ஆபரேஷன்-2ல் மீத நகைகள், பணம் மீட்பு: மீண்டும் ‘இன்ப அதிர்ச்சி’ appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Anda ,Dinakaran ,
× RELATED திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை...