×

சோழவந்தானில் வைகை ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: முழுமையாக இடிக்கப்பட்டன

 

சோழவந்தான், நவ. 26: சோழவந்தானில் வைகை ஆற்றங்கரையோரம் இருந்த ஏராளமான ஆக்கிரமிப்புகள் அதிகாரிகள் முன்னிலையில் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் எதிரில் உள்ள படித்துறை பகுதியில் வைகை ஆற்றின் கரையோரம் கடைகள், குளியல் தொட்டி, குடிசைகள் அமைத்து சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இவற்றை அகற்றுமாறு சில மாதங்களுக்கு முன்பே பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இருப்பினும் அவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை.

இதையடுத்து, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் சேகரன், வருவாய் ஆய்வாளர் கௌதமன், விஏஓ கார்த்தீஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. இதன்படி பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது. அதற்கு முன்பாக கடைகளில் இருக்கும் பொருட்களை பாதுகாப்பாக வெளியேற்றிக் கொள்ள அவற்றின் உரிமையாளர்களுக்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ‘‘வைகை ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல், தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சோழவந்தான் நகர் முழுவதும் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். அத்துடன், வைகை கரையோரத்தில் புறவழிச்சாலை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post சோழவந்தானில் வைகை ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: முழுமையாக இடிக்கப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Vaigai River ,Cholavantan ,Cholavandan ,Dinakaran ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை